மத்திய, மாநில அரசுகளின் மெத்தனம்தான் கரோனா பரவலுக்கு காரணம் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா பரவல் அதிகரித்த போது மத்திய, மாநில அரசுகள் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் மெத்தனமாக இருந்ததால் மிக அதிகப்படியான பாதிப்பையும், உயிரிழப்பையும் அனைவரும் சந்திக்க நேரிட்டது. அதேபோல தற்போதைய கரோனா 2-வது அலை பரவலுக்கும் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப்போக்கே காரணம்.
கரோனா தடுப்பு மருந்தை மக்கள் அனைவருக்கும் செலுத்துவதற்கான கால அவகாசம் இருந்தும் அதை மத்திய, மாநில அரசுகள் திறம்பட பயன்படுத்தி கொள்ளாமல் வீணடித்ததே இந்தியா முழுவதும் கரோனா பரவல் அதிகரிக்க மிக முக்கிய காரணம். கடந்த ஆண்டு கரோனா பரவலை கட்டுப்படுத்தி ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதே கரோனா 2-வது அலை உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
மத்திய, மாநில அரசுகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். கரோனா தடுப்பூசி பற்றி பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தவில்லை. கரோனா தடுப்பு மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் காட்டிய ஆர்வத்தை போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளின் உதவியுடன் மத்திய அரசு இந்திய மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பு மருந்தை செலுத்துவதில் காட்டியிருக்க வேண்டும். கொரோனா பரவல் அதிகரித்தவுடன் கரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது.
கரோனா பெருந்தொற்று கட்டுக்கடங்காமல் பரவ ஆரம்பித்த நிலையில்தான் மத்திய அரசிடம் மாநில அரசுகள் கரோனா தடுப்பு மருந்தை கேட்க ஆரம்பித்திருக்கின்றன. தமிழகத்தில் கரோனா 2-வது அலை கட்டுப்பாட்டை மீறி சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கரோனா பெருந்தொற்றின் தீவிரத்தையும், பாதிப்பையும் உணர்ந்திருக்கும் ஆளும் அரசுகள் கிடைத்த கால அவகாசத்தை தவறவிட்டது மக்களை மிகப்பெரிய பாதிப்புக்கான சூழலை நோக்கி தள்ளியிருக்கிறது. இந்திய மக்களின் மீது மத்திய அரசு போதிய கவனத்தை செலுத்தவில்லை. மாநில அரசாவது தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் கவனக்குறைவால் மீண்டும் மக்கள் அனைவரும் இக்கட்டான நிலையை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா பரவல் தீவிரத்தை உணர்ந்து தகுந்த பாதுகாப்போடு மக்கள் அனைவரும் இருக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.