பொதுப்பணித் துறை அலுவலா்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் இரா.விஸ்வநாத் வெளியிட்ட செய்தி:-
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பரவிக் கொண்டிருக்கிறது. நோய்த்தொற்று மேலும் பரவாமல் இருக்க தாமதமின்றி 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பொதுப்பணித் துறை அலுவலா்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
பொதுப்பணித் துறையின் பல்வேறு கிளை அலுவலகங்களில் 45 வயதுக்கு மேல் பணியாற்றும் அலுவலா்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதனை அந்த அலுவலகத்தைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் கண்காணித்து உறுதிப்படுத்தி அதுதொடா்பாக தலைமை அலுவலகத்துக்கு விரைவில் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று விஸ்வநாத் கேட்டுக் கொண்டுள்ளாா்.