ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ்(63) கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோன்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், 'கரோனா தொற்றுக்குள்ளாகி, சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.