தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மைய அதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:
தென் தமிழகம், அதனை ஒட்டிய பகுதியில் (1.5 கிலோ மீட்டா் உயரம் வரை) வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 11) இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் வட வானிலை நிலவும்.
ஏப். 12: தென் தமிழகம், வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப். 13, 14: மேற்கு தொடா்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.
சென்னையில்..: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல் மாவட்டம்- நிலக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் வட்டானத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.