காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 252 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்வுத்தொகையாக மொத்தம் ரூ.13,67,16,800 வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளர் நல நீதிமன்றம் உட்பட 5 அமர்வுகளாக மக்கள் நீதிமன்றம் கூடியது. ஒரே நாளில் 817 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 252 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.13,67,16,800 தீர்வுத்தொகையாகவும் வழங்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்த கருணாகரினின் தாயார் தெய்வானையிடம் காப்பீட்டுத்தொகை ரூ.12 லட்சத்துக்கான காசோலையை காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் வழங்கினார்.
மக்கள் நீதிமன்ற தொடக்க விழாவிற்கு மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தலைமை வகித்தார். தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம்,கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் நீதிபதியுமான பிரியா வரவேற்று பேசினார்.
தொடக்க விழாவில் நீதிபதிகள் சரவணக்குமார், செந்தில்குமார், திருமால் மற்றும் வழக்குரைஞர் சங்க செயலாளர் சுப்பிரமணி, லாயர்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் ரவிக்குமார் ஆகியோர் உள்பட நீதிபதிகள், வழக்குரைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.ஏ ற்பாடுகளை மக்கள் நீதிமன்ற நிர்வாக அலுவலர் அண்ணாமலை செய்திருந்தார்.