கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை அன்று நடைபெற்ற பொது ஏலத்தில், ரூபாய் 35 லட்சத்திற்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று கொங்கணாபுரம் பகுதியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு விற்பனை மையத்தில் பருத்தி, நிலக்கடலை மற்றும் எள் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களுக்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியினை இம்மையத்தில் நடைபெறும் பொது ஏலத்தில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
அதே போல் இவ்விற்பனை மையத்தில் நடைபெறும் பொது ஏலத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் ஏராளமான வியாபாரிகள் கலந்துகொண்டு, அதிக அளவில் பருத்தியினை மொத்தக் கொள்முதல் செய்து வருகின்றனர். சனிக்கிழமை அன்று நடைபெற்ற பொது ஏலத்தில் சுமார்1,550 மூட்டை பருத்திகள் விற்பனைக்கு வந்திருந்தன. அவை 275 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, வேளாண் விற்பனை மைய அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.
இதில் பி.டி ரக பருத்தியானது, குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6464 முதல் ரூ.7519 வரை விலைபோனது. அதேபோல் டிசிஹச் ரக பருத்தியானது, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8569 முதல் ரூ.9509 வரை விற்பனையானது. நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.35 லட்சத்திற்கு பருத்தி வணிகம் நடைபெற்றது.