வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து, வட்டாட்சியர் தலைமையில், அரசுத்துறை அலுவலர்கள், வணிகர்கள் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தின் கரோனா தொற்று பரவல் இரண்டாவது அலையாக மீண்டும் பரவல் அதிகரித்துள்ளது. தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்த, மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகள், தேநீர் கடைகள், திரையரங்குகளில், 50 சதவீத வாடிக்கையாளரை மட்டும் அனுமதித்தல். திருமண மண்டபங்களில், 100 பேரை மட்டும் அனுமதித்தல் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து, அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் திரையரங்கு, திருமண மண்டப உரிமையாளர்கள், வணிகர்கள் ஆகியோருடன், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் மாணிக்கம் தலைமையில், சனிக்கிழமை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை எவ்வித தொய்வும் இன்றி, முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். கரோனா பரவலைக் கட்டுபடுத்த, அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென வட்டாட்சியர் மாணிக்கம் வேண்டுகோள் விடுத்தார்.
இக்கூட்டத்தில் காவல்துறை, சுகாதாரத்துறை, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். துணை வட்டாட்சியர்கள் நீதி செல்வம், ஜெயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.