போக்குவரத்துக் கழகங்களை தனியாருக்கு விற்கும் தமிழக அரசைக் கண்டித்து ஊத்தங்கரை அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசுப் போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்கள் அனைத்து கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். எல்.பி.எப். தலைவர் ராமநாதன், சிஐடியு சங்கச் செயலாளர் தவமணி, ஏஐடியுசி சங்க செயலாளர் செல்வராஜ், எச்.எம்.எஸ் தொழிற்சங்க செயலாளர் ரவி, டி.டி.எஸ்.எப். மத்திய சங்க பொருளாளர் குணசேகரன், ஏ.ஏ.எல்.எல்.எப் மத்திய சங்க பொருளாளர் கமலேசன், டி.எல்.எஸ் தொழிற்சங்க தலைவர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
தொழிலாளர்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியாருக்கு தாரை வார்த்தது போக்குவரத்துக் கழகங்களை சீர் குறைக்காதே போக்குவரத்துக் கழக வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து ஓட்டும் முயற்சியைக் கைவிட்டு, குறைந்த பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுவதால் ஏற்படும் இழப்பை முழுமையாக அரசே ஈடுகட்டு போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்கு விதிமுறைகள் அடிப்படையில் பேருந்துகளை இயக்கு உள்ளிட்ட கோரிக்கைகளைத் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் போக்குவரத்து தொழிலாளர்கள் 35க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.