மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கவச உடையுடன் அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக அரசு, தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில், கரோனா தொற்று காலத்திலும் கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சைகளை அளித்து வருகிறது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இன்று முழு கவச உடையணிந்து இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு செய்தார். இம்மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்ட கோவிட் பராமரிப்பு மையம் தற்போது 2000 படுக்கை வசிதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள உதவி மையப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, ஆய்வகப் பிரிவு, ஆர்.டி.சி.பி.சிஆர் பரிசோதனை பிரிவு, ஊடுகதிர் பிரிவு, சி.டி.ஸ்கேன் பிரிவு மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்பொழுது அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் உணவின் தரம், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
அவர்கள் நல்ல தரமான உணவு, சிறப்பான சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்து அரசிற்கு தங்களது நன்றியினை கூறினார்கள். பின்னர், அங்கு முழு கவச உடையுடன் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்களை சந்தித்து அவர்களிடம் உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தினார். அமைச்சர் அவர்கள் உரையாடியது தங்களுக்கு மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் உள்ளது என மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் அமைச்சர், கவச உடை அணிந்து பணிபுரிவது என்பது எவ்வளவு கடினமான ஒரு விஷயம் என்பதை உணர்வு பூர்வமாக அறிந்துள்ளதாக பல முறை கூறியதாகவும், இன்று கவச உடையணிந்து ஆய்வு செய்யும் பொழுதுதான் அதன் கஷ்டம் என்னவென்று நேரில் அனுபவித்தாகவும் தெரிவித்தார். மேலும், இந்த நோய் தொற்று காலத்தில் கவச உடையணிந்து பணியாற்றும் மருத்துவக் குழுவினருக்கு தலைவணங்குவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் மரு. தேரணிராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர்.