கொடைக்கானலில் மாற்றுத்திறனாளி மற்றும் முதியவர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.
கொடைக்கானல் செல்லபுரம் பகுதியில் மாற்றுத் திறனாளி யோகராஜ்(58), முதியோர் லட்சுமி(55) ஆகிய இரண்டு குடும்பங்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். மழை, குளிர் காலங்களில் பெரிதும் அவதியடைந்தனர். இரண்டு குடும்பங்களுமே தங்களது குடிசை வீட்டைச் சரி செய்து கொடுக்க வேண்டுமென கொடைக்கானலிலுள்ள கிருபையின் வாசல் என்ற அமைப்பிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மனு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து கிருபையின் வாசல் அமைப்பினர் ரூ.3 லட்சம் செலவில் இரண்டு வீடுகளை நன்கு பராமரித்து கொடுத்துள்ளனர்.
இந்த பராமரிக்கப்பட்ட புதிய இல்ல திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. புதிய இல்லத்தை கொடைக்கானல் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், திறந்து வைத்து கிருபையின் வாசல் நிர்வாகிகளுக்கு வாழ்த்து மற்றும் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கிருபையின் வாசல் நிர்வாகி கென்னடி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளியின் உதவித் தாளாளர் ரோகன் சாம்பாபு, செயலாளர் ஜெயபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாற்றுத் திறனாளிக்கும், முதியவருக்கும் புதிய இல்லம் அமைத்துக் கொடுத்ததற்காக அப்பகுதியைச் சேர்ந்த செல்லபுரம் மக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் நன்றி தெரிவித்தனர்.