சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரியில் இருவேறு இடங்களில் மூழ்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகில் உள்ளது மட்டம் பகுதி. இங்கு நீர்ச் சுழல் இருப்பதால் அடிக்கடி காவிரியின் குளிப்பவர்கள் சுழலில் சிக்கி உயிரிழந்த வருகின்றனர். இந்த பகுதியில் குளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு எழுதி வைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இங்கு வெளியூர் மக்கள் வந்து படம் பிடிப்பதும் அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இன்று காலை மட்டும் இந்தப் பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண் சடலங்கள் மிதப்பதாக மேட்டூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
காவல் துறையினர் அங்குச் சென்று பார்த்தபொழுது இரண்டு வடமாநில இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தனர். கரையில் அவர்களது ஆடைகள் மற்றும் மிதியடி ஆகியவை இருந்தன. இறந்தவர்கள் பெயர் விபரங்கள் தெரியவில்லை. அவர்கள் சட்டைப் பையிலிருந்த தொலைபேசி எண்ணில் காவல்துறையினர் தொடர்பு கொண்டபோது இந்தியில் பேசி உள்ளனர்.
இருப்பினும் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. வெளி மாநிலத்தவர்கள் மேட்டூரில் பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். சடலங்களைக் கைப்பற்றிய மேட்டூர் காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதேபோல் மேட்டூர் தனியார் ஆலையில் பணி புரியும் பிரசாந்த் (25)என்பவர் தனது உறவினர்களுடன் திப்பம்பட்டி பகுதியில் காவிரி குளிக்கச் சென்றபொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். சடலத்தைக் கைப்பற்றிய கருமலைக்கூடல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.