திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கதவு பூட்டை உடைத்து 26 சவரன் நகை மற்றும் 2 மடிக்கணினிகள் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலைய காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலைய காவல்துறையினர் தரப்பில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது. திருவள்ளூர் அருகே அயத்தூர் இ.எஸ்.என். நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(40). இவர் இங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதோடு, இவர் அம்பத்தூரில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறாராம். இந்த நிலையில் திங்கள்கிழமை வழக்கம் போல் அம்பத்தூர் தொழில் நிறுவனத்துக்கு சென்று விட்டாராம்.
அதைத் தொடர்ந்து அவரது மனைவி சசிகலா தனது குழந்தைகளுடன் வேப்பம்பட்டு பகுதியில் உள்ள வங்கி வேலை விஷயமாக சென்றாராம். வங்கி வேலை முடிந்து 3 மணிக்கு வீட்டிற்குச் சென்றாராம். அங்கு கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தாராம். அதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்க்கையில் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்து 26 சவரன் நகை மற்றும் 2 மடிக்கணினிகள் ஆகியவைகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் சசிகலா புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஆள் இல்லாத நேரத்தில் கதவு பூட்டை உடைத்து நகை மற்றும் மடிக்கணினிகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.