மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.99அடியாகச் சரிவடைந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 4,427 கன அடியாகக் குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 20,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 850 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், ஞாயிற்றுக்கிழமை காலை 99.12 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 97.99 அடியாக சரிவடைந்தது. அணையின் நீர் இருப்பு 62.26 டி.எம்.சி.யாக உள்ளது.