சென்னை: நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் பிடிபட்ட இளைஞரிடம் போலீஸாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையிலுள்ள தமிழக காவல்துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறையைத் திங்கள்கிழமை தொடர்பு கொண்ட ஒரு நபர், ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனி 2 - ஆவது தெருவில் இயங்கி வந்த நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.
இதையடுத்து, அந்த முகவரியில் உள்ள சூர்யா அலுவலகத்துக்குச் சென்ற தேனாம்பேட்டை போலீஸார் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார், அங்கு இயங்கி வந்த சூர்யா அலுவலகம் 6 மாதங்களுக்கு முன் அடையாறுக்கு மாற்றப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இருப்பினும், பாதுகாப்பு கருதி அங்கு நடத்தப்பட்ட சோதனையில் எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார், சைபர் குற்றப்பிரிவினருடன் இணைந்து நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஷ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் புவனேஷை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இவர், ஏற்கெனவே முதல்வர் பழனிசாமியின் வீடு, நடிகர் ரஜினிகாந்த் வீடு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.