சென்னையில் முகக்கவசம் அணியாதவர்கள், பாதுகாப்பு விதிமுறைகளை மீறியவர்களிடமிருந்து இன்று ஒரேநாளில் ரூ. 5 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோன்று கரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறுவோருக்கு ரூ. 550, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500, பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படுகிறது. தமிழக அரசின் பொது சுகாதார சட்டத் திருத்தத்தில் இந்த அபராத விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுகாதார விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து இன்று ஒரேநாளில் ரூ. 5 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சென்னையில் இதுவரை 2.26 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.