விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்ததைக் கண்டித்து கோவில்பட்டியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்றார்.
விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களைக் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோவில்பட்டியில் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இனாம்மனியாச்சி விலக்கில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கோரிக்கைகள் குறித்துக் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், திமுக வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், துணை அமைப்பாளர் சந்தானம், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், பொறியாளர் அணியைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் கூட்டணிக் கட்சிகளான மதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்படத் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளைக் கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் செய்திருந்தார்.