சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை தற்போது 10,656 ஆக உயர்ந்துள்ளது சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. சென்னையில் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக சற்று அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் விகிதம் 6 சதவீதமாகக் குறைந்திருந்த நிலையில் தற்போது 7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னையில் இதுவரை 1,62,125 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,166 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 1,49,601 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 10,656 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், மண்டல வாரியாக கரோனா பாதிப்பு குறித்த விவரத்தில், கோடம்பாக்கத்தில் 1,206 பேரும், அண்ணா நகரில் 1,190 பேரும், திருவிக நகரில் 868 பேரும், ராயபுரத்தில் 863 பேரும், அடையாறில் 942 பேரும், வளசரவாக்கத்தில் 817 பேரும், அம்பத்தூரில் 752 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.