தமிழ்நாடு

இருமொழிக் கொள்கை, நீட் ரத்து: அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள்

DIN


சென்னை: அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழுக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. மு

இந்த கூட்டத்தில்,  மொழித் திணிப்பை அதிமுக எதிர்க்கிறது. தமிழகத்தில் இருமெழிக் கொள்கை என்ற கருத்தில் அதிமுக உறுதியாக உள்ளது. 

காவிரி டெல்டா மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், 

ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் இதர திட்டங்களின் மானிய நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தியும், கரோனா காலத்தில் அயராது உழைத்த முதல்வர், துணை முதல்வரைப் பாராட்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

15 தீர்மானங்கள்..

1. பொது வாழ்வுப் பணிகளுக்கு இலக்கணமாக, கரோனா நோய்த் தொற்று காலத்திலும் கண்துஞ்சாது கடமையாற்றி, மக்களின் துயர் துடைக்க அயராது அரும்பணி ஆற்றி வரும் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியும், பாராட்டும்!

2. நாட்டிற்கே முன்னோடியாகவும், அனைவருக்கும் எடுத்துக் காட்டாகவும் கரோனா நோய் எதிர்ப்புப் பணிகளையும், மருத்துவப் பணிகளையும், மறுவாழ்வுப் பணிகளையும், சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகளையும் சிறப்புடன் ஆற்றிவரும் தமிழ் நாடு அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும் நன்றியும், பாராட்டும்; பத்திரிகை மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கு நன்றியும், பாராட்டும்!

3. அரசு மேற்கொண்டிருக்கும் சிறப்பான பணிகளின் விளைவாக கரோனா நோய்த் தொற்றிலிருந்தும், பொருளாதார சரிவிலிருந்தும் மக்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதை ஏற்று, மத்திய அரசு கரோனா நிவாரணத்திற்கும், தடுப்பிற்கும் போதுமான நிதி ஆதாரத்தை தமிழ் நாட்டிற்கு வழங்க வலியுறுத்தல்!

4. தமிழ் நாடு அரசுக்கு, மத்திய அரசு தர வேண்டியுள்ள ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான மானியங்களின் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க மத்திய அரசை வலியுறுத்தல் !

5. தமிழ் நாட்டில் கரோனா காலத்திற்குப் பிந்தைய சூழலில் பொருளாதாரத்தை மீட்டெடுத்து, மக்களின்  ழ்வாதாரத்தைப் பாதுகாத்திட பொருளாதார வல்லுநர் சி. ரங்கராஜன் தலைமையில் 24 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்ததற்கு, முதல்வருக்குப் பாராட்டு !

சி. ரங்கராஜன் குழு அளித்துள்ள பரிந்துரைகளை, அரசு விரைந்து நிறைவேற்ற அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பை வேண்டுதலும், தமிழ் நாடு அரசின் முயற்சிகளுக்கு அதிமுக துணை நிற்கும் என்னும் உறுதிமொழியும் !

கரோனா நோய்த் தொற்று காலத்திற்குப் பிறகான தமிழ் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கென, புதிய முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்குப் பாராட்டு!

6. தாய்மொழி - தமிழ், உலகத்தோடு உறவாட ஆங்கிலம் என்ற இணைப்பு மொழி என்ற இருமொழிக் கொள்கையே என்றென்றைக்கும் அதிமுக மொழிக் கொள்கை. எந்த மொழிக்கும் கழகம் எதிரானதல்ல; எந்த மொழியும் எம்மீது திணிக்கப்படுவதை எம்மால் ஏற்க இயலாது - என்ற கருத்தில் கழகம் உறுதியாய் இருக்கும்.

7. v``நீட்’’ என்ற மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான அகில இந்திய பொது நுழைவு மற்றும் தகுதித் தேர்வை அதிமுக ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து எதிர்க்கிறது.

 மாநிலங்களின் கல்வி உரிமையில் ``நீட்’’ தேர்வு மூலம் மத்திய அரசு தலையிடுவதாலும், கிராமப்புற, ஏழை, எளிய, முதல் தலைமுறை மாணாக்கர்கள் மருத்துவக் கல்வி பெறுவதைத் தடுக்கும் வகையில் இருப்பதாலும், கல்வி வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாலும், ``நீட்’’ தேர்வு முறையைக் கைவிடுமாறு மத்திய அரசை அதிமுக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

 ``நீட்’’ தேர்வு முறை அமல்படுத்தப்பட காரணமாக இருந்த மத்திய கூட்டணி அரசில் பங்குபெற்றிருந்த திமுக, இப்பொழுது உண்மைகளை மறைத்துவிட்டு ``நீட்’’ தேர்வுகளைக் காட்டி அரசியல் சுயலாபங்களுக்காக கபட நாடகம் ஆடுவதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

8. பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் மாணாக்கர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கி இருக்கும் மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும், இதய தெய்வம் அம்மாவின் அரசுக்கும் நன்றியும், பாராட்டும் !
9.  தமிழ் நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் முதற்கட்டமாக 6 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், அவற்றில் புதிதாக 1,400 புதிய மருத்துவ பட்டப் படிப்பு இடங்களை உருவாக்கியும், இப்பொழுது 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுத்தும், அடுத்துவரும் ஆண்டுகளில் புதிதாக 1650 மருத்துவ பட்டப் படிப்பு இடங்கள் உருவாகவும் வகை செய்திருக்கும் கழக அரசுக்கு நன்றியும், பாராட்டும்! மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்தமைக்குப் பாராட்டும், நன்றியும்!

 காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்து, தமிழ் நாட்டின் நெற்களஞ்சியத்தை அழிவிலிருந்து காப்பாற்றிய தமிழ் நாடு அரசுக்கு நன்றி !

திட்டமிட்டவாறு ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து, காவேரியால் பாசனம் பெறும் அனைத்து விவசாயிகளும் குறுவை சாகுபடி மேற்கொள்ள வழிவகுத்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்குப் பாராட்டு !
 விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம், புதிய கலை அறிவியல் கல்லூரிகள், பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களைத் தொடங்கி உள்ளமைக்கு, அரசுக்குப் பாராட்டும், நன்றியும்.

 ஆசியாவிலேயே மிகப் பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவையும், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தையும், சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைத்து, ஒட்டுமொத்தமாக 1,022 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகளை தொடங்கி வைத்தமைக்கும், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை துவக்க நடவடிக்கை எடுத்தமைக்கும், முதலமைச்சருக்குப் பாராட்டு !

10.  இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றி மறு ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருக்கும் குழுவில், தென் மாநிலங்களைச் சேர்ந்த, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களுக்கு இடமளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல் !

 கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும், இலங்கைத் தமிழர் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தக் கோரிக்கை !

11. அ. பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய 1860-ஆம் ஆண்டைய இந்திய தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கிட சட்டத் திருத்தங்கள் செய்யப்பட இருப்பதாக அறிவித்திருக்கும் முதல்வருக்குப் பாராட்டு !

ஆ. கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை என மொத்தம் 6 புதிய மாவட்டங்களை உருவாக்கியமைக்கு, தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டும், நன்றியும்.

12. அ. காவேரி (கட்டளை) - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 700 கோடி ரூபாய் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பணிகளை செய்து முடிக்க நடவடிக்கை எடுத்துள்ள முதல்வருக்கு நன்றியும், பாராட்டும்.
ஆ. விவசாயிகளின் நலன் கருதி, நடப்பாண்டில் 50 ஆயிரம் பம்புசெட்டுகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கியமைக்கு நன்றியும், பாராட்டும்!
13. காவேரி ஆற்றின் குறுக்கே புதிதாக மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்குக் கண்டனம்! மேகதாது அணை திட்டத்தைத் தடுத்து நிறுத்த உரிய நேரத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் தமிழ் நாடு அரசுக்குப் பாராட்டு!

14. தமிழ் நாட்டின் ஒப்பற்ற முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களை அழகுற அமைத்தமைக்கும், ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசு சார்பில் நினைவு இல்லமாக மாற்றியமைக்கும் நன்றி !

15. அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றுபட்ட சிந்தனையோடு, ஒற்றுமையாய் பணியாற்றி, தமிழ் நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்போம், உழைப்போம் என்று சூளுரை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT