கோபி: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபி அருகே உள்ள நம்பியூரில் குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்ப்பதற்காக பெற்றோர் சம்மத கடிதத்துடன் தான் வர வேண்டும் என வருவாய்த்துறை மூலமாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்து அறிவிப்பார்.
மேலும் கூறுகையில், பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அவர்கள் தங்களது சந்தேகங்களை தீர்ப்பதற்காக மட்டுமே அக்டோபர் 1-ஆம் தேதி பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தேகங்களை வீட்டில் இருந்தே கேட்டறிந்துகொள்ளும் வகையில் கட்டணமில்லாத தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.