தமிழகத்தில் புதிதாக 5,791 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 5,791 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,80,808 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றும் ஆயிரத்துக்கும் மேலாக 1,280 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய செய்திக் குறிப்பில் 80 பேர் (அரசு மருத்துவமனை- 53, தனியார் மருத்துவமனை- 27) பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,313 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 5,706 பேர் ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,25,154 பேர் குணமடைந்துள்ளனர். 46,341 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 96,102 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 71,00,660 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்றைய தேதியில் அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 116 என மொத்தம் 182 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.