அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் புகார் மனுக்கள் மீது தீர்வு காணும் முகாம் நடைபெற்றது.
தென் மண்டல காவல்துறைத் தலைவர் முருகன் உத்தரவின் பேரில் திருநெல்வேலி காவல்துறைத் துணைத்தலைவர் பிரவின்குமார் அபினபு, திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆலோசனையின் பேரிலும் திருநெல்வேலி மாவட்டத்திற்குள்பட்ட காவல் உட்கோட்டங்களில் பொதுமக்கள் புகார் மனு மீது தீர்வு காணும் முகாம் நடைபெற்றது.
முகாமில் அம்பாசமுத்திரம், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், பாப்பாக்குடி ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ள குடும்பப் பிரச்சினை, இடப்பிச்சினை, குற்றவழக்குகளில் தொடர்புடைய மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களிடையே பேசி வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன. முகாமில் அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டு 34 வழக்குகளைத் தீர்த்து வைத்தனர்.
ஒரு மனு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முகாம் நடப்பது தெரிந்து புதிதாகக் கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது.