திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே முன்விரோதம் காரணமாக 2 பெண்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவலர்கள் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால் குறிச்சியைச் சேர்ந்தவர் அருணாசலம் என்பவரின் மனைவி சண்முகத்தாய்(50). அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மனைவி சாந்தி(35). இவர்கள் இரு குடும்பத்தினரும் உறவினர் ஆவர்.
இந்நிலையில், இன்று சனிக்கிழமை (செப்.26) ஒரு மர்ம கும்பல் இவர்கள் வீட்டின் மீது வெடிகுண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. இந்த சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த சண்முகத்தாய் மற்றும் சாந்தி ஆகியோரை அந்த மர்ம கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.
இதில் பலத்த காயமடைந்த சண்முகத்தாய் மற்றும் சாந்தி இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இதில் சண்முகத்தாயின் தலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த நான்குநேரி காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று விசாரித்து வருகிறார்.
இது குறித்து காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த மார்ச் மாதம் நான்குநேரி பகுதியில் உள்ள உணவகத்தில் 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
மேலும் காவலர்கள் இது குறித்து விசாரித்து வருகின்றனர். ஒரே பகுதியில் இரண்டு பெண்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதன்காரணமாக அப்பகுதியில் காவலர்கள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.