திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழுவின் சார்பில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்ட மசோதாக்களை ரத்து செய்ய வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை சாலை மறியல் செய்து, சட்ட நகல் எரிந்ததாக 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள, அத்தியவாசிப் பொருள் திருத்தச் சட்டம். வேளாண் விளைப் பொருள்கள் ஊக்குவிப்பு மற்றும் உறுதி செய்து கொடுக்கும் சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவை மீதான ஒப்பந்த பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றால் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பாதிப்புக்கு உள்ளவர்கள் என எதிர்ப்பு தெரிவித்து. இதனை, உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே சாலை மறியல், சட்ட நகல் எரிப்பு போராட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் ( சிபிஎம் சார்பு) மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.ரெகுபதி , (சிபிஐ சார்பு) நகரச் செயலர் வி.எம்.கலியபெருமாள் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், சிபிஐ நகரச் செயலர் வி.கலைச்செல்வன் , சிபிஎம் மாவட்டக் குழு டி.சந்திரா , விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஏகாம்பரம் , எம்.பி. ராஜ்குமார் உள்ளிட்ட 50 பேர் சாலை மறியலில் ஈடுபட்டு, மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த நகலைத் தீயிட்டு எரித்தனர். போராட்டத்தில் , ஈடுபட்ட அனைவரையும் மன்னார்குடி காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து சிறிது நேரத்தில் விடுதலை செய்தனர்.