மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பென்னாகரம் பேருந்து நிலையத்தின் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதிலும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பென்னாகரம் பேருந்து நிலையத்தின் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பென்னாகரம் பகுதி குழுத் தலைவருக்கே அன்பு தலைமை வகித்தார்.
பாப்பாரப்பட்டி தொகுதி செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இதில் வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம் 2020, வேளாண் உத்தரவாதம் மற்றும் வேளாண் ஒப்பந்த பாதுகாப்பு திருத்த சட்டம் 2020, அத்தியாவசிய பொருட்களின் திருத்த சட்டம் 2020 ஆகிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இந்த சாலை மறியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், மாதன், சின்னம்பள்ளி பகுதி குழு செயலாளர் சக்திவேல், பென்னாகரம் நகர செயலாளர் வெள்ளியங்கிரி, ஏரியூர் ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் கருவூரான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மக்கள் அதிகாரம், தமிழ் புலிகள் கட்சி மற்றும் திராவிடர் கழகத்தின் சார்பில் பென்னாகரம் பேருந்து நிலையத்தின் முன்பு மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பென்னாகரம் பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 52 பேரும், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் 15 பேரையும் பென்னாகரம் போலீசார் கைது செய்துள்ளனர்.