போடி: போடியில் வெள்ளிக்கிழமை, புதிய வேளாண்மை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 42 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேளாண்மை சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களை செய்தது. இந்த சட்ட திருத்தங்கள் விவசாயிகளை பாதிக்கும், விவசாயத்தை அழிக்கும் எனக் கூறி, சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி போடியில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
போடி தேவர் சிலை அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.
இதனையடுத்து போடி நகர் காவல் நிலைய போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட 42 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.