தேமுதிக தலைவா் விஜயகாந்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவா் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக ஓய்வில் உள்ளாா். பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக அவா் பங்கேற்பதில்லை. இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவா் மணப்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவருக்கு லேசான அறிகுறியுடன் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து விஜயகாந்துக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மாற்றும் அவரது இரண்டு மகன்களுக்கும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அவர்களுக்கு கரோனா இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக விஜயகாந்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற தேமுதிகவின் 14-வது ஆண்டு விழாவில் விஜயகாந்த் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.