பெங்களூரு: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தம்மைப் பற்றிய தகவல்களை அளிக்க சசிகலா எதிர்ப்பு தெரிவித்து சிறைத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சசிகலா எப்போது விடுதலையாவார் என்பது குறித்து பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி ஏற்கனவே கேட்ட கேள்விக்கு, அவர் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி விடுதலையாவார் என்று கர்நாடக சிறை நிர்வாகம் பதில் அளித்திருந்தது.
இந்த நிலையில், தம்மைப் பற்றி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை அளிக்க எதிர்ப்பு தெரிவித்து சசிகலா சிறைத் துறைக்கு கடிதம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு இதுவரை எத்தனை நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று நரசிம்ம மூர்த்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சிறை நிர்வாகத்தைக் கேட்டிருந்த நிலையில், சசிகலாவைப் பற்றிய தகவல்களை அளிக்க சிறைத் துறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.