ராமேசுவரம்: மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக மீன்பிடிக்கச் செல்ல மீனவா்களுக்கு மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா். இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் துறைமுகங்களில் புதன்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து சூறை காற்று வீசி வருவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் மீனவா்களின் பாதுகாப்புக் கருதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினா் செவ்வாய்க்கிழமை தடை விதித்தனா். இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவா்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவா்கள் கடலுக்குச் செல்லாததால் அந்தந்த துறைமுகங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.