விவசாயிகள், சிறு வணிகர்களைப் பாதிக்கச் செய்யும் மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்த மத்திய அரசு, அதற்குத் துணை போகும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 28ல் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதனை சிறப்பாக நடத்துவது குறித்து ஈரோடு தெற்கு மாவட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று ஈரோடு தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். தி.மு.க. எம்.பி. கணேச மூர்த்தி, காங் மாநகர் மாவட்ட தலைவர் ரவி, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் முத்துசாமி பேசியதாவது:
ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்பாட்டுடன் நடத்த வேண்டும். கரோனா காலம் என்பதால் நண்பர்களை வரவழைத்து ஆபத்தில் தள்ளி விடக் கூடாது. 100 பேருக்கு மேல் கூட்டத்தைச் சேர்க்கக் கூடாது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போர் பயன்படுத்தப் பச்சை துண்டு, பச்சை நிற முக கவசம் தயார் நிலையில் தி.மு.க. அலுவலகத்தில் உள்ளது. போக்குவரத்துக்கு, பொதுமக்களுக்கு இடையூறு இன்றி ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.