கரூர் அருகே சாலையோரம் இருந்த தகவல் பலகை மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வீரமலையைச் சேர்ந்த மணி மகன் சந்தோஷ்(26). இவர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பேக்கரி கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மகாலட்சுமி(20). இவர்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகிறது.
இந்நிலையில் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் சொந்த ஊருக்குச் சென்று விட்டு புதன்கிழமை நள்ளிரவில் காரில் அலங்காநல்லூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் கார் கரூர் அடுத்த தளவாபாளையம் பகுதியில் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அங்குள்ள பொறியியல் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென கார் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த தகவல் பலகை மீது கார் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். ஹ
இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதுதொடர்பாக வேலாயுதம் பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.