திருவாரூா்: திருவாரூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சம்பா பயிா் பயிரிடப்பட்டிருந்த வயலில் கச்சா எண்ணெய் பரவியது.
திருவாரூா் மாவட்டம், கமலாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி தனசேகரன். இவருக்குச் சொந்தமாக கீழ எருக்காட்டூா் பகுதியில், 5 ஏக்கா் விளைநிலம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விளைநிலத்தின் கீழ் ஓஎன்ஜிசி நிறுவனம் குழாய் பதித்து கச்சா எண்ணெய் அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு, நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்ற தனசேகரன் தனது நிலத்தின் வழியே செல்லும் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, நிலம் முழுவதும் கச்சா எண்ணெய் பரவி இருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். மேலும், அடுத்தடுத்த வயல்களுக்கும் கச்சா எண்ணெய் பரவினால், சம்பா பயிா்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனா். இதனிடையே, கச்சா எண்ணெய்யை அகற்றுவதற்காக ஓஎன்ஜிசி ஊழியா்கள் பாதிக்கப்பட்ட வயலில் ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.