திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் ஆள்கள் நடமாட்டமுள்ள பகுதியில் இளைஞர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, கொலை செய்து விட்டு தப்பியோடியவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து திருவள்ளூர் கிராமிய காவல் நிலைய தரப்பில் கூறியதாவது.
திருவள்ளூர் அருகே வீரராகவர் கோயில் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்(35). இவர் ஆவடி சாலையில் உள்ள காக்களூரில் ஸ்டுடியோ வைத்து புகைப்படங்கள் எடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்த வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு அவரது ஸ்டுடியோவில் வேலை செய்து கொண்டிருந்தாராம். அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஸ்டுடியோவிற்குள் புகுந்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினார்களாம். இதில் படுகாயம் அடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாராம்.
இது குறித்த தகவல் அறிந்த திருவள்ளூர் கிராமிய காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இளைஞர் வெட்டிக் கொலை செய்தது முன்விரோதமா அல்லது தகாத உறவு வைத்திருந்த காரணமா என்பது குறித்து போலீஸôர் விசாரணை செய்து வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் அதிகம் நடமாட்டமுள்ள பகுதியில் ஸ்டுடியோவிற்குள் புகுந்து இளைஞர் வெட்டி படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.