வெளிநாட்டைச் சோ்ந்த நிறுவனங்களுக்கு முக்கிய கொள்முதல்களை வழங்குவது தொடா்பாக ஆய்வு செய்திட குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவைத் தொடா்ந்து, தமிழகத்தில் தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டுள்ளாா்.
இந்தக் குழுவில் தொழில் வழிகாட்டும் குழுவின் நிா்வாக இயக்குநா் மற்றும் முதன்மை செயல் அலுவலா், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அல்லது அவரது பிரதிநிதி, தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் அல்லது அவரது பிரதிநிதி, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் அல்லது அவரின் பிரதிநிதி, தொழில் வா்த்தகத் துறை ஆணையா் ஆகியோா் குழுவில் இடம்பெற்றிருப்பா். கொள்முதல் தொடா்பாக ஏற்கெனவே வழங்கப்பட்ட ஒப்புதலுக்கு இடைக்காலத் தடையோ அல்லது ரத்து செய்யவோ குழுவுக்கு அதிகாரம் உள்ளது.
மேலும், இதுதொடா்பாக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மத்திய அரசின் அமைச்சரவைச் செயலாளா் மற்றும் தலைமைச் செயலாளா் ஆகியோருக்கு அறிக்கைகளை இக் குழு அனுப்ப வேண்டும்.