சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்ட 10 மாவட்ட நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதி பணியிடங்களில், தற்போது 54 நீதிபதிகள் உள்ளனர். 21 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்து வந்த நிலையில், பதவி மூப்பு அடிப்படையில் மாவட்ட நீதிபதிகள் பிரிவில் இருந்து
உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் மூத்த மாவட்ட நீதிபதிகளின் பட்டியலை உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்தது.
அந்த பட்டியலில் மாவட்ட நீதிபதிகளான ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சத்திகுமார் சுகுமார குரூப், முரளி சங்கர் குப்புராஜூ, மஞ்சுளா ராஜராஜூ நல்லய்யா, தமிழ்செல்வி டி.வளையாம்பாளையம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த பரிந்துரை பட்டியலுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின்னர் இந்த 10 மாவட்ட நீதிபதிகளும் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பர்.
உச்ச நீதிமன்றம் 10 நீதிபதிகளுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக உயரும்.