கைவிரல் ரேகைகளைப் பதிவு செய்யும் வகையில், நியாயவிலைக் கடைகளில் விற்பனை இயந்திரங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. சென்னையில் தெற்கு மண்டலம் உள்பட இதர மண்டலங்களிலும் இயந்திரங்கள் மாற்றம் கண்டு வருகின்றன.
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், கைரேகை விரல் பதிவு முறை நடைமுறைக்கு வருகிறது. எங்கிருந்தாலும் பயனாளியின் கைவிரல் ரேகை பதிவினைக் கொண்டு பொருள்களைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக நியாயவிலைக் கடை இயந்திரங்களில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இப்போதுள்ள விற்பனை இயந்திரங்களில் அதற்குரிய வசதிகள் இல்லை. எனவே, அதற்குப் பதிலாக புதிய இயந்திரங்களை மாற்ற நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை நியாயவிலைக் கடை பணியாளா்கள் தங்களது விற்பனை இயந்திரங்களை, சம்பந்தப்பட்ட உதவி ஆணையா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை தெற்கு மண்டலத்தைப் பொருத்தவரை, புதிய விற்பனை இயந்திரத்தில் பதிவுகள் செய்யும் பணி வரும் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் பொது விநியோகத் திட்ட பொருள்கள் வழங்கப்படாது எனவும், அதற்குப் பதிலாக வரும் 28 மற்றும் 29 ஆகிய நாள்களில் பொருள்கள் அளிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
புதிய விற்பனை இயந்திரத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு நியாயவிலை கடை விற்பனையாளா்களை உணவுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. விற்பனை இயந்திரத்தை அலட்சியமாக அல்லது தவறாகக் கையாண்டாலோ, சேதப்படுத்தினாலோ அதனைச் சரிசெய்ய அல்லது மாற்றி வழங்குவதற்கான தொகை சம்பந்தப்பட்ட நியாயவிலை கடை விற்பனையாளரே செலுத்த வேண்டும் என்று உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது.