மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி திருப்பூரில் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எச்எம்எஸ்.மாவட்டச் செயலாளர் எம்.முத்துசாமி தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்ற தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:
தொழிலாளர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு ஆன்லைன் பதிவில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும். கரோனா காலத்தில் அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை பெரும்பாலான தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் வந்து சேரவில்லை.
ஆகவே, அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். அமைப்பு சாரா வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து ஓய்வூதியர்களுக்கு கடந்த 12 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதியத் தொகையை வழங்க வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்,ஏஐடியூசி சார்பில் சேகர், ஜெகநாதன், சிஐடியூ சார்பில் குமார், சம்பத், ஐஎன்டியூசி சார்பில் சிவசாமி, ராஜேந்திரன் எல்பிஎஃப் சார்பில் ஜீவா சிதம்பரசாமி, ஆர்.ரெங்கசாமி, தொமுக சார்பில் அ.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதே போல, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.