புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே, அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலின்படி AITUC, CITU, INTUC, AIUTUC, MLF, அரசு ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏ ஐ டியூசி பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தொழிலுறவு சட்டத் தொகுப்பு, சமூகப் பாதுகாப்பு சட்ட தொகுப்பு, தொழிலகப் பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் வேலைச்சூழல் சட்டத் தொகுப்பு ஆகிய மூன்று தொழிலாளர் சட்டத் தொகுப்பு மசோதாக்களை தாக்கல் செய்துள்ள மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிலாளர் விரோத இந்த புதிய மசோதாக்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், கரோனா காலத்துக்கு சம்பளம் வழங்கவும், வேலைநீக்கம் உள்ளிட்ட கரோனாவுக்கு பிந்தைய கால தொழிற்தாவாக்களை உடனடியாக எடுத்து, தீர்வு காண வேண்டும், பொது முடக்கத்தால் வருமானம் இழந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 7,500 நிவாரணம் வழங்க வேண்டும், பொதுத் துறைகளை தனியார் மயப்படுத்துவதைக் கைவிடவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.