திருவள்ளூர் அருகே மண் குவாரியில் இரவு நேரங்களில் மண் எடுக்க வந்த லாரிகளை மாவட்ட சிறப்பு காவல் படைப் பிரிவு காவல்துறையினர் 7 லாரிகளை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த ஏக்காட்டூர ஏரியில் சவுடு மண் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த ஏரியிலிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான லாரிகளில் அணிவகுத்து வந்து இரவு பகல் என்று சவுடு மண் அள்ளிச் செல்கின்றன.
இந்த நிலையில் ஏரியிலிருந்து மண் எடுக்க இரவு நேரங்களிலும் லாரிகள் வருவதால் சிரமமாக இருப்பதாக ஏகாட்டூர் கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட சிறப்பு காவல் படைப் பிரிவு காவல்துறையினர் விரைந்து சென்று இரவு நேரங்களில் மண் எடுப்பதற்காக வந்த 7 லாரிகளை பிடித்து கடம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இரவு நேரங்களிலும் சவுடு மண் லாரியில் அள்ளிச் செல்ல யார் அனுமதி கொடுத்தது என்றும், முறைகேடாக இரவு நேரத்திலும் மண் எடுப்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.