விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமையில், திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் செவ்வாய்க்கிழமை நகரின் சார்பதிவாளர் அலுவலகம் அருகிலிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
அருப்புக்கோட்டையில் சார்பதிவாளர் அலுவலகம் அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, இணையதள முறைமூலம் திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாமிற்கு அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ், முன்னாள் நகர் மன்றத்தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கே.கே.எஸ்.வி.டி.சுப்பாராஜ், திமுக ஒன்றியச் செயலாளர்கள் பொன்ராஜ், பாலகணேசன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது ஒன்றியப் பகுதி கிராமங்களிலிருந்து புதிய உறுப்பினர்களாகச் சேர வந்தோரிடம் இணையதள முறையில் புகைப்படம் எடுத்தும், தகவல்களைப் பெற்றும் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. இதன்படி தயாரான புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை உரிய நபர்களிடம் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் நேரில் வழங்கி உரையாடினார். அப்போது, வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியமைப்பது 100 சதவீதம் உறுதி எனக்கூறிய அவர், திமுகவில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான நிர்வாக வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். உடன் திமுக நிர்வாகிகள் பலரும், தொண்டர்களும் மேலும் புதிய உறுப்பினர்களாகச் சேர வந்த இளைஞர்கள்,பெண்கள் சுமார் 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.