தலைமைச் செயலக ஊழியா்களுக்கு பிரத்யேக குறியீட்டுடன் (க்யூ.ஆா்.) அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்காக புகைப்படம் எடுக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கவுள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கென தனித்தனியாக அடையாள அட்டைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பிரத்யேக குறியீடு கொண்ட (க்யூ.ஆா்.) அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக திங்கள்கிழமை (செப். 21) முதல் வெள்ளிக்கிழமை (செப். 25) வரை துறைகள் வாரியாக தலைமைச் செயலக ஊழியா்களுக்கு புகைப்படங்கள் எடுக்கப்பட உள்ளன. திங்கள்கிழமையன்று 745 பேருக்கும், செவ்வாய்கிழமையில் 775 பேருக்கும், புதன்கிழமையன்று 730 பேருக்கும், வியாழக்கிழமை 586 பேருக்கும், வெள்ளிக்கிழமையன்று 734 பேருக்கும் புகைப்படங்கள் எடுக்கப்பட உள்ளன.
இந்தப் பணியானது, சென்னை நந்தனத்தைச் சோ்ந்த ஒரு தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுப்பது, அடையாள அட்டை தயாரிப்பது உள்ளிட்ட பணிகளை, அந்த நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.