சென்னை பெருநகர காவல் துறை சார்பில் வழக்குகளின் மூலம் அறியப்பட்ட இளஞ்சிறார்களுக்கான தொழிற்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
குற்ற வழக்குகளில் கண்டறியப்பட்ட இளஞ்சிறார்களை மீட்டு நல்வழிப்படுத்த சென்னை பெருநகர காவல் துறையினர் தமிழக அரசின் வழிகாட்டுதல்களோடு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் சென்னை பெருநகர காவல் துறை இணைந்து இளஞ்சிறார்கள் மற்றும் வேலை நாடுநர்களுக்கான சிறப்பு தொழில் நெறி மற்றும் திறன் பயிற்சிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (21.09.2020) காலை 11.00 மணியளவில் கிண்டியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 47 வழக்குகளில் அறியப்பட்ட இளஞ்சிறார்கள் காவல் துறை ஏற்பாட்டின் பேரில் பங்குபெற்றனர். இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் விஷ்ணு, கலந்து கொண்டு துவக்கி வைத்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் சிறப்புரை வழங்கி இளஞ்சிறார்கள் சமுதாயத்தில் பொறுப்புள்ள குடிமகனாகவும் குற்றம் மறந்து சுற்றம் அறிந்து தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் பாதுகாக்கும் நல்ல மனிதர்களாக மாற்றுவதற்கு இந்த பயிற்சி உதவும் என்றும், சமுதாய வளர்ச்சியில் தமிழக அரசும், காவல் துறையும் எடுக்கும் இந்நிகழ்வு பல இளஞ்சிறார்களை நல்வழிப்படுத்தும் என்று வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் கூடுதல் ஆணையாளர் முனைவர் ஆர்.தினகரன், (தெற்கு) இணை ஆணையாளர் ஏ.ஜி.பாபு, (தெற்கு மண்டலம்) அடையாறு துணை ஆணையாளர் விக்ரமன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.