கோவை: கோவை அருகேயுள்ள பில்லூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையில் இருந்து நொடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பில்லூர் அணை உள்ளது. மேற்குதொடர்ச்சி மலையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கன மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வரத்து காணப்படுகிறது. இதனால் 100 அடி கொள்ளளவான அணையின் நீர் மட்டம் 97 அடியை எட்டியது.
தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நான்கு மதகுகள் வழியாக பவானி ஆற்றில் 7 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பவானி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வருவாய்த் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறித்து ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக கோவை வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) சுரேஷ் தெரிவித்துள்ளார்.