தஞ்சாவூர்: மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள வேளாண் அவசர சட்டங்களைத் கண்டித்து தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள உழவர்களுக்கு எதிரான 3 அவசர சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி செப். 24-ம் தேதி திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டம் முடிந்தவுடன் தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் திடீரென சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த காவல் துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் உள்பட 16 பேரை கைது செய்தனர்.