விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொத்து தகராறில் பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, காவல்துறையினர் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே அய்யனார்புரம் முனியாண்டி கோயில் தெருவைச் சேர்ந்த ஆகாசம் பிள்ளை என்பவரது மனைவி லீலாவதி(55). இவர் சத்திரப்பட்டியில் உள்ள மருத்துவ துணி ஏற்றுமதி ஆலையில், விசைத்தறி தொழிலாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது குடும்பத்திற்குச் சொந்தமான சொத்துகள், கடந்த சில மாதங்களுக்கு முன் அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது இவரது மருமகன் முருகன் என்பவருக்கும், லீலாவதிக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் லீலாவதி வழக்கம்போல இரவு வேலைக்காக சத்திரப்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது
லீலாவதியை பின் தொடர்ந்து வந்த முருகன், வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தன்னிடம் வாக்குவாதம் செய்தவரை தள்ளி விட்டு பணிக்குச் சென்ற போது, ஆத்திரம் அடைந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லீலாவதியின் கழுத்தில் வெட்டி உள்ளார்.
இதனால் படுகாயம் அடைந்த லீலாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கீழராஜகுலராமன் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.