சீர்காழியில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். காவலர்கள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி திருவள்ளுவர் நகர் இரண்டாவது தெருவில் வசிப்பவர் அரசுபள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தஜோதி( 52) இவரது மனைவி சித்ரா(49) என்பவர் அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுள்ளார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர் சித்ராவை தலையில் அடித்துள்ளார். இதில் சித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அருகில் வசித்த பெண் வெளியே வந்து பார்த்த போது சித்ரா ரத்த வெள்ளத்தில் பினமாக கிடப்பது கண்டு அலறியுள்ளார்.
இதனையடுத்து ஆனந்தஜோதி மற்றும் குடும்பத்தினர் வந்து பார்த்த போதுதான் கோலம் போட வந்த சித்ரா கொலை செய்யபட்டது தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சீர்காழி டிஎஸ்பி யுவப்பிரியா தலைமையில் காவல் ஆய்வாளர் மணிமாறன், துணை காவல் ஆய்வாளர் லோகநாதன் மற்றும் காவலர்கள் சித்திராவின் உடலை கைப்பற்றி நகைக்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சித்ரா காதில் அணிந்திருந்த தோடுகள் அப்படியே இருந்தன. மேலும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அடுத்தடுத்து பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.