மதுரை: மதுரையில் கரோனா பொதுமுடக்கத்தின் போது தனது கல்விச் செலவுக்காக வைத்திருந்த ரூ. 5 லட்சத்தில் ஏழைகளுக்கு நிவாரணப் பொருள்கள் வாங்கிக் கொடுத்த மாணவி தற்போது தனக்கு நன்கொடையாக கிடைத்த ரூ. 4 லட்சத்தையும் ஏழைகளுக்கு வழங்கியுள்ளார்.
மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் மோகன். சலூன் கடை உரிமையாளர். இவரது மகள் நேத்ரா ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கரோனா தொற்றுப் பரவலால் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தபோது, தன்னுடைய எதிர்கால கல்விச் செலவுக்காக சேமித்து வைத்திருந்த ரூ. 5 லட்சத்தில் அப்பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கினார். மாணவியின் இந்த செயலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உள்பட பல்வேறு தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
மேலும் ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழைகளுக்கான நல்லெண்ணத் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் எதிர்கால கல்விச் செலவுக்காக வைத்திருந்த ரூ. 5 லட்சத்தை ஏழைகளுக்கு செலவிட்டதால் பல சமூக ஆர்வலர்கள் மாணவி நேத்ராவின் கல்விக்காக ரூ. 4 லட்சம் வரை நன்கொடை வழங்கினர். ஆனால் நேத்ரா நன்கொடையாக வந்த அந்தப் பணத்தையும் ஏழைகளுக்கு வழங்கியுள்ளார். இதையடுத்து அந்த மாணவிக்கு பொதுமக்கள் மீண்டும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.