ராமேசுவரம்: மகாளய அமாவாசையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தேவிபட்டினம் உள்ளிட்ட கடற்கரைகளில் புனித நீராடவும், பூஜைகள் செய்யவும் வியாழக்கிழமை (செப்.17) தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் இ.கார்த்திக் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் மகாளய அமாவாசை தினத்தன்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், திருப்புல்லாணி சேதுக்கரை, தேவிபட்டினம் நவபாசனம் மற்றும் மாரியூர் (சாயல்குடி) ஆகிய கடற்கரை புண்ணிய தலங்களில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பார்கள்.
ஆனால் தற்போது கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடற்கரையோரங்களில் மக்கள் கூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை பிறப்பித்துள்ளது.
ஆகவே, பொதுமக்கள் ராமேசுவரம் உள்ளிட்ட புனித கடற்கரைப் பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.17) குளிக்கவோ, பூஜைகளில் ஈடுபடவோ கூடாது.
வெளியூர் பக்தர்கள் ராமேசுவரம் உள்ளிட்ட இடங்களுக்கு வருவதையும் தவிர்க்கவேண்டும். கோயிலில் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.