புதுச்சேரியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தை கடுமையாக்க உத்தரவிட மறுத்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக புதுச்சேரி அரசு முடிவெடுக்கலாம் என உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தை கடுமையாக்க உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக அரசுக்கு மனு அளித்தேன். ஆனால் அந்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா நோய்த் தொற்றால் புதுச்சேரி மட்டுமல்ல உலகம் முழுவதும் மரணங்கள் அதிகரித்துள்ளன.
பொதுமுடக்கத்தை கடுமையாக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அரசின் பணிகளை நீதிமன்றம் செய்ய முடியாது என கருத்து தெரிவித்தனர். பின்னர்
மனுதாரரின் கோரிக்கையை 4 வாரங்களில் பரிசீலிக்க புதுச்சேரி மாநில அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.