சென்னை மாதவரம் அருகே கொசப்பூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினரும் வழக்குரைஞருமான எம்.நாராயணன் தாக்கல் செய்த மனுவில், சென்னை மாதவரத்தை அடுத்த கொசப்பூரில் எனக்குச் சொந்தமான நிலத்தில் திமுக மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் மார்பளவு வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டது.
சிலை திறப்பு விழாவுக்கு அனுமதி கோரி கடந்த ஆகஸ்ட் 27 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் காவல்துறை மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தேன். அந்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தனக்குச் சொந்தமான நிலத்தில் சிலைகளை வைத்துக் கொள்வது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.