விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அருள்மிகு சுப்பாஞானியார் சித்தர் கோவிலில் ஐப்பசி பெளர்மணி நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளுடன், அன்னாபிஷேகம் மற்றும் அன்னதானம் சனிக்கிழமை நண்பகலில் நடைபெற்றது.
பாளையம்பட்டியில் உள்ள பழமையான சித்தர் கோவிலான அருள்மிகு சுப்பாஞானியார் திருக்கோவிலில் சுப்பாஞானியார் மற்றும் அவரது சீடரான இராமலிங்கர் ஆகிய இரு சித்தர்கள் அடங்கிய சந்நிதானங்கள் அருகருகே உள்ளதாகிய தனிச்சிறப்பு மிக்கதாகும் .இக்கோவிலில் ஐப்பசி பௌர்ணமி நாளை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சிறப்பு வழிபாடுகளுடன், 21 வகை அபிஷேகங்கள் நடைபெற்றதும், தீப,தூப ஆராதனைகள் நடைபெற்று முழு அலங்காரத்தில் அருள்மிகு நவமச்சிவாயர் காட்சி தந்தார்.
அதனையடுத்து நண்பகல் 12.30 மணிக்கு அருள்மிகு நமச்சிவாயப்பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றதும், முழு அலங்காரத்தில் நமச்சிவாயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மலர்கள், மற்றும் அபிஷேகத்திற்கான மஞ்சள், சந்தனம், குங்குமம், இளநீர், பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இறைவனுக்குப் படைத்து, நமச்சிவாயரின் அலங்காரக்காட்சியை பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் நேரில் கலந்து கொண்டனர். கோவில் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.